2ஜி விவகாரம்- ப.சிதம்பரத்துடன் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் பேச்சு
நியூயார்க்: 2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பெயரை இழுத்து விட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரணாப் முகர்ஜி, இன்று ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது பெரும் சூடு பிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி, சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2ஜி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
மேலும், வாஷிங்டன் சென்றுள்ள பிரணாப் இன்று நியூயார்க்கில் பிரதமரை சந்தித்து 2ஜி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மறுபக்கம், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ப. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டெல்லி திரும்பிய பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications