கோவை கொங்குநாடு கல்லூரி இணை செயலாளர் கொலை: 4 மாணவர்கள் கைது

கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணை செயலாளராக இருந்தவர் இளங்கோவன். அவர் ஈரோட்டில் உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் வசித்து வந்தார். அவருக்கு அங்கு ஒரு பண்ணை வீடும் உள்ளது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் அவர் பண்ணை வீட்டில் தான் இருப்பார்.
அவருக்கும் லோகேஷ்(19), ராபின்சன் (21), ஷங்கர் (19), பிரசன்னா (18), முகமது தாரிக் (20), பெரியசாமி (21) ஆகியோருக்கும் கடந்த 3 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த 6 பேரும் இளங்கோவனின் பண்ணை வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த 6 பேரும் இளங்கோவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்து அவரது உடலை அவருடைய ஜீப்பிலேயே ஏற்றி அந்த பண்ணை வீட்டில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள கால்வாயில் போட்டனர்.
பின்னர் அதே ஜீப்பில் கோவைக்குத் தப்பிய அவர்களை அவினாசி அருகே போலீசார் மடக்கினர்.
விசாரணையில் தாங்கள் தான் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இளங்கோவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications