மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்தல்: அமைச்சர் வைத்தியலிங்கம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் வழக்கறிஞர் சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.செயல்வீரர் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது, கடந்த தி.மு.க.ஆட்சியின் போது தி.மு.க.வினர் திருமங்கலம் பார்முலாவை கடைபிடித்தனர். நாம் ஜெயலலிதா பார்முலாவை பின்பற்றினாலே இந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற முடியும்.
ஜெயலலிதா பார்முலா என்றால் கடந்த 4 மாத தமிழக அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள், மிக்ஸி, கிரைண்டர், பேன், தங்கத்தாலி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை எல்லாம் மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு, கடந்த 5 ஆண்டில் செய்த ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், கோடிக்கணக்கில் சுருட்டிய சொத்துகள், அவரது குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் நிலங்கள், கட்டிடங்கள் வாங்கி குவித்தது, உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களுக்கு தெரிவித்தலே அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிடும்.
இந்த தேர்தலை பொறுத்தவரை கே.என். நேருவுக்கு இது கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். அவரது அரசியல் சாம்ராஜ்ஜியத்திற்கு இதோடு சமாதி கட்ட வேண்டும். இனி அவர் காலம் முழுவதும் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய அத்தியாயத்தை திருச்சி மக்கள் உருவாக்கி தரும் வகையில் பாடம் புகட்ட வேண்டும், என்றார்.
இந்த கூட்டத்தில், செல்லூர் ராஜூ, உதயகுமார், கோகுலஇந்திரா, வேட்பாளர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications