அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டி: குவியும் சுயேச்சை வேட்பாளர்கள்- உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் சிக
நெல்லை: வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருமளவில் சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருவதால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் இறங்குவதால் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் புதிய சிக்கல் உருவாகலாம் என தெரிகிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும், கவுன்சிலர் பதவிக்கும் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வீதம் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர் பெயர், சின்னங்கள் தான் இடம் பெறச் செய்ய முடியும். 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக 1 வாக்குப்பதிவு இயந்திரம் தேவைப்படும். இந்த கூடுதல் வாக்குப்பதிவு இயந்திர தேவையை அனைத்து உள்ளாட்சிகளிலும் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிகளிலும் இந்த நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு தகுந்தவாறு போதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாநில தேர்தல் ஆணையத்திடம் இல்லை. தற்போது 75 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்துதான் பெறப்பட்டுளளது. சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை 6 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். எனவே, கூடுதல் வாக்குப்பதிவு இயந்திர தேவையை சமாளிக்க முடியாத பட்சத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
நெல்லை, தூத்துககுடியில் 10,972 பேர் மனு தாக்கல்
நெல்லை, தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை 29-ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. நேற்றுவரை இந்த 2 மாவட்டங்களில் 10,972 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம் தேதி துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 4,147 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு 24 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 237 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 386 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1504 பேரும், நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் விஜிலா சத்யானந்த், மதிமுக வேட்பாளர் மகேஸ்வரி, மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 76 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 100 பேரும், 3-ம் நிலை நகராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், 3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 48 பேரும், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 368 பேருமாக மொத்தம் 2 ஆயிரத்து 816 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்த்தில் ஏற்கனவே 2,280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 176 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 310 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 844 பேரும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 60 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 86 பேரும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 27 பேரும், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 205 பேருமாக மொத்தம் 1,729 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,816 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,729 பேருமாக மொத்தம் 4,545 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications