சென்னை மேயர் பதவிக்கு முன்னாள் பாமக அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மனு தாக்கல்
சென்னை : சென்னை மேயர் பதவிக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இன்று பாமக வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
பாமகவில் குறிப்பிடத்தக்க ஒரு பிரமுகர் ஏ.கே.மூர்த்தி. மத்திய ரயில்வே இணை அமைச்சராக இவர் இருந்தபோது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலக்கியவர். ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டாலும் கூட தனது அதிரடி செயல்பாடுகளால் ரயில்வே அதிகாரிகளை மிகச் சிறப்பாக வேலை வாங்கியவர்.
தமிழகத்திற்கும் பல ரயில்கள் வந்து போக வழி வகுத்தவர் இவர் என்றால் மிகையாகாது. இவர் ரயில்வே இணை அமைச்சரான பின்னர்தான் தமிழகத்திற்கு பல ரயில்கள், புதிய ரயில் பாதைகள் கிடைத்தன.
அதிரடி அமைச்சர் என்று பாமக வட்டாரத்தால் செல்லமாக அழைக்கப்படும் மூர்த்தி சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயனிடம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் மூர்த்தி.
இவரையும் சேர்த்து இதுவரை 25 பேர் மேயர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications