வேட்புமனுதாக்கல் செய்ய வந்தவர்களால் பரபரப்பு- ஒருவர் மரணம், இன்னொருவர் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். நெல்லையில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் 2 கட்டமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா எழுமூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட எழுமூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் வேலு மகன் பிச்சைப்பிள்ளை(45) வந்தார்.
தனது ஆதரவாளர்களுடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் வந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதே இடத்தில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிச்சைப்பிள்ளை இறந்துவிட்டார்.
நெல்லையில் ஒருவர் கைது:
நெல்லை, பாளை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சிங் நாடார்(40). இவரது சொந்த ஊர் களக்காடு அருகே உள்ள இடையன்குளம். சிங் நாடார் மீது நெல்லை மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சிங் நாடார், இடையன்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார். இதையடுத்து, இடையன்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அங்கு தயராக இருந்த தனிப்பிரிவு போலீசார் சிங் நாடாரை கைது செய்தனர்.
வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்ததும், மற்றொருவர் கைது செய்து செய்யப்பட்ட இவ்விரு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications