நாங்குநேரி அருகே பூக்குழி இறங்குவதில் மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
நாங்குநேரி: நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடியில் நடந்த கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டி விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்காக முத்து விநாயகர் தசரா குழு சார்பாக பூக்குழி இறங்கும் விழா நேற்று இரவு நடந்தது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குவார்கள். நேற்றிரவு நடந்த விழாவுக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் ஆட்டோ, கார், வேனில் வந்து கூடியிருந்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்து பூக்குழி இறங்கும்போது சூரங்குடி பக்தர்கள் நாங்கள் தான் முதலில் இறங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் கடம்போடுவாழ்வு பகுதியில் இருந்து வந்தவர்கள் நாங்கள் ஏற்கனவே வந்து காத்திருப்பதால் முதலில் நாங்கள் தான் இறங்குவோம் என்று கூறினார்கள். இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது இருதரப்பினரும் அரிவாளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி வெட்டிக்கொண்டனர்.
இதனால் சம்பவ இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. பக்தர்கள் அலறி அடித்து ஓடினார்கள். உடனடியாக போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதலில் கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், முருகன் ஆகிய 2 பேருக்கும், சூரங்குடியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் துரை, மணி உள்பட 4 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
உயிருக்கு போராடிய அவர்களை வள்ளியூர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications