அப்சலுக்குக் கருணை கோரும் தீர்மானம் நிறைவேற்றக் கோரி அமளி-காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் தடியடி
ஸ்ரீநகர்: அப்சல் குருவுக்கு கருணை காட்டக் கோரி தீர்மானம் நிறைவேற்றாமல் தடை செய்வோரைக் கண்டித்து அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. என்ஜீனியர் ரஷீத் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் இன்று சட்டசபைக்குள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பும், அமளியும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
ராஜீவ் கொலையாளிகளுக்குக் கருணை காட்டுமாறு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல அப்சல் குருவுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை என்ஜீனியர் ரஷீத் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விவாதம் சட்டசபைக்கு வந்தபோது பாஜகவினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றும் பெரும் அமளி ஏற்பட்டது. நேற்று வாக்கெடுப்புக்கு அனைவரும் ஆயத்தமான நிலையில் பாஜகவினருக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் குதித்தனர். கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரின் மாறி வாக்களித்த 7 பாஜக உறுப்பினர்களை நீக்கக் கோரி காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏக்களும் அமளியில் குதித்தனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அப்சல் குரு தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த ரஷீத் இன்று 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சட்டசபைக்குத் திரண்டு வந்தார். தனது தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸாரும், பாஜகவினரும் இடையூறு செய்வதைக் கண்டித்து சட்டசபைக்குள் நுழைய அவர்கள் முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த தடியடி மற்றும் போராட்டம் காரணமாக சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications