சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
சென்னை : சென்னையில் இன்று காலையில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். சாலைகளில் வெள்ளம் போல ஓடிய மழை நீரால் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த திடீர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயிலும் புழுக்கமும் மக்களை வதைத்து வந்தது. மழை வராதா என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலோ புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென வானம் கடுமையாக இருட்டி வந்தது. 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் இது கன மழையாகவும், சில இடங்களில் மிக பலத்த மழையாகவும் இருந்தது. பலத்த காற்றும் , இடியும் கூடவே இருந்ததால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பல பகுதிகளும் வெள்ளக்காடாகின. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக சென்னையில் பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications