மதுரை புதூர் பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் கண்டுபிடிப்பு
மதுரை: மதுரை புதூரில் உள்ள பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை புதூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு இன்று காலை போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் பார்சல் ஒன்று இருப்பதைப் பார்த்தனர்.
இதையடுத்து தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் பறந்தது. தல்லாகுளம் போலீஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். பார்சலை சோதித்தபோது அதில் பட்டாசுகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிபொருள் மற்றும் ரசாயணப் பொருள் மற்றும் வயர் இணைப்புகளுடன் கூடிய வெடிபொருள் இருந்தது தெரியவந்தது. டைமரும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அதை பத்திரமாக அங்கிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தி செயலிழக்கச் செய்தனர்.
இந்த வெடிபொருளை யார் வைத்தனர் என்பது குறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை முழுவதும் பஸ் டெப்போக்கள், பஸ்களில் தீவிர கண்காணிப்பும் சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களிலும் கண்காணிப்பும், சோதனையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications