மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
காரைக்குடி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு
போராட்டம் நடத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை எம்.பி.யும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பாராளுமன்ற
தொகுதி அலுவலகம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
காரைக்குடி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம்
ஒதுக்குவதற்கான காங்கிரஸ் கட்சி சார்பில் உரிய கடிதம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி பொதுச் செயலாளர் சார்லஸ்
தலைமையில் இளைஞர் காங்கிரசார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ப.சிதம்பரம் அலுவலகத்தை
முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு
கட்சி தலைமையில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை தொகுதிக்கு முன்னாள் எம்.பி. நஜிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்க்க கட்சி நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. காங்கிரஸ் தனித்து போட்டி
என்பதால் காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர் பதவியில் போட்டியிட 200க்கும் மேற்பட்டோர்
விருப்பமனு செய்திருந்தனர்.
ஆனால் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் ஆகியோர் மாற்று
கட்சியினருடன் கூட்டணி பேசிக் கொண்டு 9 கவுன்சிலர்களுக்கு மட்டும் சின்னம் வழங்க படிவம்
வழங்கி உள்ளனர்.
மீதமுள்ள 27 வார்டுகளிலும் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுயேட்சையாக
போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது குறித்து அகில இந்திய தலைவர் சோனியா
காந்திக்கும், மாநில தலைவர் தங்கபாலுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம், என்றனர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் அலுவகத்தை காங்கிரஸ் கட்சியினரே முற்றுகையிட்டு
போராட்டம் நடத்திய சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications