திருச்சி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் விஜயா ஜெயராஜ் - கருணாநிதி அறிவிப்பு

திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைப்பதை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து திருச்சி மாநகராட்சிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வருகிற 7-ந்தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க.- தி.மு.க., ம.தி.மு.க. அறிவித்தன. திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயா போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ம.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ரொக்கையா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இன்று தி.மு.க. சார்பில் மேயர் பொறுப்புக்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று தி.மு.க.. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளும் மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. அங்கு யார்-யார் களத்தில் நிற்பார்கள் என்பது 10-ந் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications