11 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்த சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம்!

இன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளாகும். இதையடுத்து டெல்லி வந்த சந்திரசேகர ராவ், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை தொடங்கினார். காலை 11 மணிக்கு அவர் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் ராஜ்காட் வளாகத்தில் உள்ள புல்வெளிப் பகுதியில் அமர்ந்தார் ராவ்.
பிற்பகல் 2 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர். ஆனால் உண்ணாவிரதம் இருப்பதற்கான அனுமதி எதையும் ராவ் பெறவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகின.
இந்த நிலையில் 1 மணிக்கே தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார் ராவ்.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸோ, மத்திய அரசோ இதைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன.
இதைக் கண்டிக்கும் வகையில் இன்று அடையாள உண்ணாவிரதம் இருந்தார் ராவ் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஆனால் 11 மணிக்குத் தொடங்கி 1 மணிக்கு முடிவடைந்த இதை உண்ணாவிரதப் போராட்டம் என்று எப்படிக் கூற முடியும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications