பன்றிக்கு வைத்த சுருக்கில் சிக்கிய சிறுத்தை பரிதாப பலி-கம்பியை வைத்தவர் கைது

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட குமரன் நகரைச் சுற்றிலும் காப்பு காடுகளும் தேயிலை தோட்டங்களும் காணப்படுகின்றன. இந்த காடுகளில் வசிக்கும் காட்டு பன்றிகள், காட்டு எருமைகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குமரன் நகருக்குள் எட்டிப்பார்ப்பது வாடிக்கை.
இந்த நிலையில் நேற்று காலையில் டேவிட் என்பவரின் வீட்டருகே சிறுத்தைப்புலி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை ஒன்று மரத்தில் தொங்கியவாறு உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து குமரன் நகரைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் சிறுத்தைப்புலி உயிரிழந்து விட்டது.
இதனையடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் ஏணி வைத்து ஏறி இறந்த சிறுத்தை புலியின் உடலை மீட்டு கீழே இறக்கினர். சிறுத்தை புலியை ஆய்வு செய்த நீலகிரி வடக்குப்பகுதியைச்சேர்ந்த வனத்துறை அதிகாரி எஸ். ராமசுப்பிரமணியன், காட்டுபன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட சுருக்குக்கம்பியில் சிக்கி ஒரு வயது பெண் சிறுத்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுத்தைப்புலி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (48) என்பவர் காட்டு பன்றியை பிடிக்க சுருக்கு கம்பி வைத்துள்ளதும், அதில் சிறுத்தை புலி சிக்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் சுருக்கு வைத்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரத்தில் தொங்கியவாறு இறந்துகிடந்த சிறுத்தையைக் காண கிராமத்தினர் அனைவரும் திரண்டதால் குமரன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications