நடத்தையில் சந்தேகம்- கணவன் ஓங்கி அறைந்ததில் மனைவி பலி
சென்னை: சென்னையில் கணவன் ஓங்கி அறைந்ததில் மனைவி பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து போலீசார் அந்த கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (35). டிராவல்ஸில் கார் டிரைவராக உள்ளார். அவரது மனைவி கலா (26). நர்ஸ். அவர்களுக்கு பிரகாஷ் (4), சூர்யா (2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். கலா அவ்வப்போது செல்போனில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார். இதனால் சுப்ரமணியத்திற்கும், கலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். யாரிடம் சிரித்துப், சிரித்துப் பேசுகிறாய் என்று சுப்ரமணியம் தகராறு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே செல்போனி்ல் சிரித்துப் பேசுவது குறித்து தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுப்ரமணியம் கலாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அதில் கலா மயங்கி விழுந்துவி்ட்டார். உடனே அவரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையடுத்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications