ஸ்வீடன் கவிஞர் டோமாஸுக்கு இலக்கியத்துக்கான நோபல்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 1931ம் ஆண்டு பிறந்தவர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர்(80). கவிஞர். அவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை, தந்தை பத்திரிக்கையாளர். டோமாஸ் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல், உளவியல் பாடப்பிரிவுகளில் கடந்த 1956ம் ஆண்டு பட்டம் பெற்று உளவியலாளராக பணியாற்றினார்.
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆர்வமாக கவிதைகள் எழுதிய டோமாஸ் தனது 23ம் வயதில் 'செவன்டீன் போயம்ஸ்' என்ற கவிதை நூலை வெளியிட்டு உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். எளிதில் விளக்க முடியாத சம்பவங்களை, உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்துவது தான் டோமாஸின் ஸ்டைல். கடந்த 1990-ம் ஆண்டு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதில் அவருக்கு பேசும் திறன் போனது.
பேச முடியாமல் போனாலும் கவிதைகள் எழுதுவதை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவரின் கவிதைகள் ஆங்கிலம் உள்பட 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிளை என்பவர் டோமாஸின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஆவார்.
கடந்த 2000ம் ஆண்டில் 'செலக்டட் போயம்ஸ்', 2001ல் 'தி ஹாப் பினிஷ்ட் ஹெவன்', 2006ல் 'தி கிரேட் எனிக்மா' என்னும் கவிதைத் தொகுப்பு ஆகியவைகள் டோமாஸின் பெயர் சொல்லும் படைப்புகள் ஆகும். அவர் பெல்மேன் பிரைஸ், ஜெர்மனியின் பெட்ரார்க் பிரைஸ், கவிதைக்கான போன்னியர் விருது, இலக்கியத்துக்கான நியூஸ்டாட் சர்வதேச விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று தெரிந்ததும் பத்திரிக்கையாளர்கள் அவர் வீட்டில் குவிந்துவிட்டனர். அவரது மனைவி மோனிகா அவருக்குப் பதிலாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தனது கவிதைகளுக்காக நோபல் பரிசு கிடைத்துள்ளதை நினைத்து என் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். நோபல் பரிசை வாங்கப் போகிறோம் என்பதே ஒரு சந்தோஷம். அதுவும் கவிதைக்காக நோபல் பரிசு வாங்குவதில் இரட்டிப்பு சந்தோஷம் என்றார்.
இந்த முறை இரு இந்தியர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்தனர். ஆனால் அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications