முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் உறவினர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை!

திமுக ஆட்சியின் போது சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். இவர் குமரி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரேஷ் ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஓழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் சுரேஷ்ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உறுதியானது. இதை தொடர்ந்து சுரேஷ்ராஜன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
திண்டுக்கல், விருதுநகர், திருச்சி ஆகிய 3 மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் சுரேஷ் ராஜன் வீடு, அலுவலகம், மற்றும் உறவினர்களின் வீடுகளை கண்காணித்தனர்.
இன்று காலை அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வெள்ளாளர் தெருவில் உள்ள சுரேஷ் ராஜன் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றபோது வீட்டில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி, மகன் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் சோதனைக்கு வந்த விபரத்தை அதிகாரிகள் தெரிவித்து வீட்டுக்குள் சென்று ஆவணங்களை வாங்கி பார்த்து விசாரணையில் ஈடுபட்டனர்.
சுரேஷ் ராஜன் வீட்டில் சோதனை தொடங்கிய அதே நேரத்தில் வெள்ளாளர் தெருவில் உள்ள அவரது சகோதரி உமா வீடு, வெள்ளாளர் கிழக்கு தெருவில் உள்ள இரும்பு ஆலை அலுவலகம், தம்மத்து கோணம் எறும்பு காட்டில் உள்ள வலை கம்பெனி, வெள்ளாளர் மேற்கு தெருவில் உள்ள சுரேஷ் ராஜனின் மாமனார் வீடு, பர்வத்தினி தெருவில் உள்ள கொழுந்தியாள் வீடு, பழவூரில் உள்ள இரும்பு ஆலை ஆகிய 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தனிதனிக்குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவற்றை கைப்பற்றிய போலீசார் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக முன்னாள் அமைச்சர்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், நிலம் அபகரித்ததாகவும் இதுவரை 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ராஜன் 9வது முன்னாள் அமைச்சராவார்.












Click it and Unblock the Notifications