அத்வானியின் ரத யாத்திரைக்கு தீம் சாங் தயார்- இன்று வெளியீடு!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொள்ள ஊழலுக்கு எதிரான ரத யாத்திரைக்காக தீம் சாங் ஒன்றை தயாரித்துள்ளனர். இன்று மாலை அத்வானி முன்னிலையில் ஆடியோ வெளியீடு நடைபெறுகிறது.
அக்டோபர் 11ம் தேதி பீகாரிலிருந்து தனது ரத யாத்திரையை தொடங்குகிறார் அத்வானி. பீகார் முதல்வர் நிதீஷ் குமார் யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரை தொடக்க விழாவுக்கு நரேந்திர மோடி வரக் கூடாது என்று நிதீஷ் குமார் தடை போட்டுள்ளார். இதை பாஜகவும் ஏற்று மோடியை வர வேண்டாம் என்று கூறி விட்டது.
இந்த நிலையில் யாத்திரை தொடர்பான வேலைகள் படு ஜரூராக நடந்து வருகிறதாம். ரத யாத்திரைக்காக ஒரு தீம் பாடலையும் உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல் வெளியீடு இன்று மாலை அத்வானி முன்னிலையில் நடைபெறுகிறது. மக்களை கட்டி எழுப்புவோம் என்ற தலைப்பில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அசுத்தமான அரசியல், ஊழல் புகார்கள், திறமையற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் இருக்குமாம்.
அத்வானியின் யாத்திரையின்போது அவருடனேயே இருக்க பொதுச் செயலாளர்கள் அனந்த்குமார், ரவிசங்கர் பிரசாத், செயலாளர்கள் ஷாம் ஜஜு, முரளிதர் ராவ் ஆகியோர் கூடவே இருப்பார்கள் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
38 நாள் யாத்திரை அக்டோபர் 11ம் தேதி பீகாரில் தொடங்கி நவம்பர் 20ம் தேதி டெல்லியில் முடிவடையும்.












Click it and Unblock the Notifications