30 வருஷமா மாறிமாறி ஓட்டுப் போட்டீங்க, ஒருவாட்டி தேமுதிகவுக்கு போடுங்களேன்- விஜயகாந்த்
சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக மாறி, மாறி ஓட்டுபோட்டீர்களே ஒரு முறை எங்களுக்கும் தான் வாய்ப்பு கொடுத்து பாருங்கள். சென்னையை சிங்காரச் சென்னையாக்குவேன் என்றார்களே, எங்கிருக்கிறது சிங்காரம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக சென்னை மேயர் வேட்பாளர் கோ. வேல்முருகன், தேமுதிக மற்றும் சிபிஎம் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தண்டையார்பேட்டை, மணலி மார்க்கெட், காமராஜர் சாலை, திருவொற்றிழூர் தேரடி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் தினமும் இந்த திறந்த வேனில் சுற்றி, சுற்றி வந்து பிரச்சாரம் செய்கிறேன். என்னடா இவன் விரட்டி, விரட்டி வருகிறானே? இவனும், இவன் கட்சியினரும் லஞ்சம் வாங்குவார்களா? என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் ஒரு போதும் லஞ்சம் வாங்கமாட்டேன். என் கட்சியினரையும் வாங்கவிட மாட்டேன். ஒரு தவறு செய்தால், அதைத்தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது எங்கள் கட்சி.
மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்வது தான் உள்ளாட்சி. மாநகராட்சி மந்திரி சபைக்கு நிகரானது. கடந்த 30 ஆண்டுகளாக மாறி, மாறி ஓட்டு போட்டீர்கள். மாநகராட்சியை ஆண்டவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒரு முறை எங்களுக்கு ஓட்டு போட்டுப் பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் வசதி, மின்சார வசதி தங்குதடையின்றி கிடைக்கும். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வரும்.
கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை சிங்காரச் சென்னை ஆக்கப்போகிறோம் என்றார்கள். சென்னையில் எங்கே இருக்கிறது சிங்காரம். சிங்கப்பூர் ஆக்குவேன் என்றார்கள். சிங்கப்பூரை சினிமாவில் மட்டும் தான் பார்க்க முடியும். அவர்கள் சொல்வது எல்லாம் பொய். நல்ல தண்ணீருக்கு பதிலாக குழாயில் சாக்கடை வருகிறது.
அரை மணி நேரம் மழை பெய்தால் போதும் தெருக்களில் நடக்க முடியாது தண்ணீர் தேங்கிவிடும். இதற்கு காரணம் பாதாள சாக்கடைகளை தூர்வாரதது தான்.
துவக்கத்தில் எங்கள் கட்சிக்கு ஒரு எம். எல். ஏ. இருந்தார். ஆனால் இன்றைக்கு 29 எம். எல். ஏ.க்கள் உள்ளனர். விஜயகாந்துக்கு வாக்களியுங்கள். ஒரு முறை மாற்றி வாக்களித்தால் தான் உள்ளாட்சியில் மட்டுமல்ல இந்தியாவிலும் மாற்றம் ஏற்படும். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்றால் அது இந்தியா முழுவதும் எதிரொலி்ககும். அப்பொழுது தான் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் வரும். யாரும் லஞ்சம் வாங்க அஞ்சுவார்கள். நான் மட்டும் தான் உங்களை சந்தித்து ஓட்டு கேட்கிறேன். வேறு யாராவது வருகிறார்களா என்று பார்த்தீர்களா? வந்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற பயம் தான். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை.
யார், யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அந்த ஆணி வேரை பிடுங்குங்கள். அதற்கான ஆயுதம் தான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் போடப்போகும் ஓட்டு. அதுவே அவர்களுக்கு நீங்கள் வைக்கும் வேட்டு. உங்கள் ஓட்டு உங்கள் ஊரைக் காப்பாற்ற வேண்டும். நான் மக்களுக்கு நல்லதைத் தான் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications