அணு உலைப் பணிகளை செவ்வாய்க்குள் நிறுத்தாவிட்டால் மீண்டும் போராட்டம்- கூடங்குளம் போராட்டக் குழு

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி பெரியஅளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு நடத்தியது. இதையடுத்து அக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசுக் குழுவுடன் டெல்லி சென்று பிரதமரை போராட்டக் குழுவினர் சந்தித்தனர்.
அப்போது அணு மின் நிலையைத்தை மூடுவது குறித்து பிரதமர் உறுதியளிக்கவில்லை என்பதால் போராட்டக் குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் அணு மின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறறது.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறுகையில் தமிழர்கள் விவகாரத்தில் எப்போதுமே மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்கிறது.
ஈழப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, நதி நீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையாக இருந்தாலும் சரி, அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடந்து வருகிறது. தமிழர்களின் நலன்களைப் பி்ன்னுக்குத் தள்ளுவதை அது வாடிக்கையாக கொண்டுள்ளது. இது தமிழ் மக்களைப் புறம் தள்ளி, அவமதிக்கும் செயலாகும் என்றார் உதயக்குமார்.
உண்ணாவிரதத்திற்கு இடையே உதயக்குமார் தலைமையில் போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் போராட்டக் குழுவினர் கூறுகையில், வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இல்லாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தை காலவரையின்றி தொடர முடிவு செய்துள்ளோம் என்றனர்.
இதனால் கூடங்குளம் போராட்டம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications