10ம் வகுப்பு தேர்வில் புதுவை அமைச்சர் ஆள் மாறாட்டம் செய்தது உண்மை-அமைச்சர் சி.வி. சண்முகம்
புதுச்சேரி: புதுச்சேரி கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பி.எம்.கல்யாணசுந்தரம், 10ம் வகுப்பு தனித் தேர்வின்போது ஆள் மாறாட்டம் செய்தது உண்மை என்று தெரிய வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக திண்டிவனம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் கல்யாண சுந்தரம். இவர் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடங்களில் பெயிலானவர். 1994ம் ஆண்டு முதல் இந்த இரு பாடகங்களையும் முடிக்காமல் வைத்திருந்தார் கல்யாண சுந்தரம். இந்த நிலையில் தற்போது அமைச்சராகி விட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின்போது அவர் நேரில் வந்து பரீட்சை எழுதாமல் ஆள் வைத்துத் தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார். அதில் அமைச்சரின் ஆள் மாறாட்ட செயல் உண்மை எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், திண்டிவனம் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில், புதுவை அமைச்சர் கல்யாண சுந்தரம் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விசாரணை நடத்தபட்ட கல்வித்துறை குழுவினர் அமைச்சர் எழுதியதாக கூறப்படும் அறிவியல் (சமூக அறிவியல் தேர்வை அமைச்சர் எழுதவில்லை) விடைத்தாளை ஆராய்ந்து பார்த்தனர். அதில் உள்ள கையெழுத்தையும், அமைச்சரின் கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் வேறு வேறு என்பது தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சருக்குப் பதில் வேறு ஒருவர் பரீட்சையை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கலவி அலுவலர் பி.குப்புசாமி திண்டிவனம் காவல் நிலையத்தில் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் கல்யாண சுந்தரம், சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு அதிகாரியாக இருந்து, அமைச்சரின் ஆள் மாறாட்டத்திற்கு உதவிய ஆசிரியர் ஆதவன் (இவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்), கல்வித்துறை அதிகாரி ரஜினிகாந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
புகார் குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில், புதுவை அமைச்சர் மீதான ஆள் மாறாட்டப் புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 29-ம் தேதி நடந்த அறிவியல் தேர்வில் ணசுந்தரம் பெயரில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால் தேர்வை அவர் எழுதவில்லை. 30-ம் தேதி நடந்த சமூக அறிவியல் பாடத்துக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். எனினும் அன்றைய தினம் அவர் பெயரில் தேர்வு எழுதப்படவில்லை. விசாரணைக்குப் பின்னர் அவரைக் கைது செய்வது குறித்து முடிவெடுப்போம் என்றார்..












Click it and Unblock the Notifications