800 வீடுகள் முன்பு அரிசி மூட்டைகள் வைத்தது யார்? அதிகாரிகள் விசராணை
கடலூர்: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நெல்லிக்குப்பம் அருகே 800 அரிசி மூட்டைகளை போட்டுச் சென்றது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கின்றது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் அருகே யாரோ 800 அரிசி மூட்டைகளை போட்டுச் சென்றுள்ளனர்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விலங்கல்பட்டு பஞ்சாயத்தில் விலங்கல்பட்டு, விலங்கல்பட்டு காலனி, பெத்தாங்குப்பம், குழந்தைக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராம்ங்களில் சுமார் 650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 1,650 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சரவணன், ராமதாஸ், சுந்தரவதினி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் 25 கிலோ எடை கொண்ட மொத்தம் 600 மூட்டைகளை யாரோ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் கிராமத்தினர் கதவைத் திறந்தபோது வீட்டு வாசலில் அரிசி மூட்டை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த மூட்டைகளைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. சிலர் கோவில்களிலும், பொது இடங்களிலும் கொண்டு சென்று போட்டனர். மூட்டைகளை வீட்டு வாசல்களில் வைத்த மர்ம ஆசாமிகளே அவற்றை யாரும் அறியாமல் எடுத்துச் சென்றனர்.
முதல் நாள் போட்ட மூட்டைகளையே மக்கள் தொடாத நிலையில் நேற்று காலையும் விலங்கல்பட்டு காலனியில் சுமார் 200 வீடுகளின் முன்பு 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை வைத்துவி்ட்டு சென்றனர். அந்த மூட்டைகளையும் மக்கள் பொது இடங்களிலும், கோவில்களிலும் கொண்டுபோய் போட்டனர். மீண்டும் அந்த மர்ம ஆசாமிகள் எப்படி யாரும் அறியாமல் மூட்டைகளை வைத்தார்களோ அதேபோன்று எடுத்துச் சென்றனர்.
வேட்பாளர் யாரோ தான் ஓட்டுகளைப் பெறுவதற்காக இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதே போன்று செய்யாறு நகராட்சி 4-வது வார்டு பகுதியிலும் வாக்கு கேட்டு வாக்களர்களுக்கு 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் வழங்கப்படுவதாக கிராம அதிகாரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அரிசி மூட்டைகள் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்து, அங்கு நின்று கொண்டிருந்த ராஜேந்திரன் ( 27), மாசிலாமணி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications