ஆக்ஷன் கிங் ஏ.கே.மூர்த்தியை மேயராக தேர்ந்தெடுங்கள்- அன்புமணி பிரசாரம்
சென்னை: மக்கள் தொண்டர், ஆக்ஷன் கிங் எனப் பெயரெடுத்துள்ள ஏ.கே.மூர்த்தியை சென்னை மாநகர மேயராகத் தேர்ந்தெடுங்கள். அவரை மேயராக தேர்ந்தெடுத்தால் சென்னை மாநகரம் பசுமை மயமாகும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் மயிலாப்பூரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 42 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகிறார்கள். திராவிடக் கட்சிகளுக்கே மக்கள் மாறி மாறி ஓட்டுப் போட்டு வருகிறார்கள். ஏ.கே.மூர்த்திக்கு ஆக்ஷன் கிங் என்று பெயர். ஒரு பிரச்சினை என்றால் அடுத்த நிமிடமே அவர் ஸ்பாட்டில் இருப்பார். அதிகாரிகள் வருவதற்கு முன்பே அவர் வந்து நிற்பார். சாக்கடை அடைப்பாக இருந்தாலும் சரி, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அவர் வந்து நிற்பார். எனவே மூர்த்தியை உங்களது மேயராக தேர்வு செய்யுங்கள்.
ஒருவர் எழில் மிக்க சென்னை ஆக்குவோம் என்றார். மற்றொருவர் சிங்கார சென்னையாக்குவோம் என்றார். ஆனால் சென்னையில் எங்குபார்த்தாலும் சாக்கடை, கொசு தொல்லை, கொலை, கற்பழிப்புதான் நடக்கிறது.
எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலே சென்னையில் பல லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். சென்னையில் மட்டும் எங்கள் அமைப்பு 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பல கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு ஆசியாவிலே பசுமையான நகர் சென்னை என்ற நிலையை உருவாக்குவோம்.
மாற்றி மாற்றி திராவிட கட்சிகளுக்கு ஓட்டுபோட்டீர்கள். அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இந்த கட்சிகளின் தலைமை மட்டும்தான் வேறு. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஒரு மாற்றத்தை உருவாக்கவேண்டும்.
சென்னையில் கூவத்தை அழகுபடுத்தி படகுவிடுவோம் என்று கூறினார்கள். பல கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தாலும் இன்னும் கூவம் அப்படியேதான் உள்ளது. ஏ.கே.மூர்த்தி மேயரானால் நிச்சயமாக கூவத்தை மாற்றி அமைப்பார்.
ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் பா.ம.க. கொள்கையாகும். பூரணமதுவிலக்கு கொள்கை என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும். ஏ.கே.மூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்தால் சுகாதார பணிப் படையை உருவாக்குவோம். இந்த திட்டத்தின் கீழ் யாராவது பீடி-சிகரெட் குடித்தாலோ, ரோட்டில் சிறுநீர்கழித்தாலோ, எச்சில் துப்பினாலோ அவர்களை பிடித்து அபராதம் விதிப்போம். சுகாதாரமான, பசுமையான சென்னையை உருவாக்குவோம்.
மக்கள் தொண்டர் என்று பெயர் பெற்றுள்ள மூர்த்திக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பல்வேறு சீர்திருத்தங்களை, புதுமைகளை அவர் படைப்பார். வரலாற்றுப் புகழ் பெற்ற சென்னை மாநகராட்சியின் முகத்தை மாற்றியமைப்பார். உலகின் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்றுவார் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications