கார் விபத்தில் சிக்கியதில் தம்பதியர் உட்பட 3 பேர் பலி
சென்னை: உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, சென்னை திரும்பிய கணவன்-மனைவி உட்பட 4 பேர் பயணித்த கார், விபத்தில் சிக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் அருண்குமார்(27). இவரது மனைவி நிரஞ்சனா(26). ஐ.டி.இன்ஜினியர். இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
சென்னையில் தங்கி, வேலை பார்த்த 2 பேரும், ஆயுத பூஜை விடுமுறைக்காக, அருண்குமாரின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம், கத்தரிக் குப்பத்திற்கு சென்றனர். அங்கு உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், நேற்று காரில் சென்னை திரும்பினர். அருண்குமார், நிரஞ்சனா மற்றும் உறவினர்களான சிலம்பரசன் மற்றும் வினோத்குமார் ஆகிய 4 பேரும் காரில் பயணித்தனர்.
காரை வினோத் குமார் ஓட்ட, அகரம் அரசு பள்ளி அருகே வந்தபோது வளைவு ஒன்றில் காரின் கட்டுப்பாடு இழந்தது. இதில் சாலையோர மரங்களில் வரிசையாக சென்று கார் மோதியது. அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்த சிலம்பரசன் காரில் இருந்து வெளியே தூக்கி ஏறியப்பட்டார்.
தொடர்ந்து பல மரங்களில் மோதிய காரின் வேகம் குறைந்து அப்பகுதியில் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேப்பங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications