கூடங்குளம் போராட்டக் குழுவின் பின்னணியில் மர்ம நபர்கள்- பாலபிரஜாபதி அடிகளார் சரமாரி புகார்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் போராட்டத்தை கூடங்குளம் போராட்டக் குழு நடத்தி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக உதயக்குமார் செயல்படுகிறார். இந்தக் குழுவில் பல்வேறு பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பாலபிரஜாபதி அடிகளார். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அய்யாவழி ஆன்மீகத் தலைவர் ஆவார். மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆவர்.
இந்த நிலையில் போராட்டக் குழுவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் மீது பாலபிரஜாபதி அடிகளார் பல்வேறு புகார்களை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போராட்டக் குழுவின் போக்கில் பெரும் மாற்றம் தென்படுகிறது. முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் திட்டடமிட்டு செயல்பட்ட நிலை மாறி தற்போது சிலர் முக்கியத் தலைவர்களை இருட்டடிப்பு செய்யஆரம்பித்துள்ளனர்.
பிரதமருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது கலந்து கொண்ட குழுவில் சிலரை சேர்க்க இவர்கள் மறுத்து விட்டனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதில் உள்நோக்கம் உள்ளது. இந்தக் குழுவை சில மர்ம நபர்கள் பின்னாலிருந்து இயக்குவதாக சந்தேகிக்கிறேன். இதுகுறித்து தமிழக அரசு விசாரித்து யார் அவர்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
பாலபிரஜாபதி அடிகளாரின் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுகதான் இந்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பாலபிரஜாபதி அடிகளார் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சாமித்தோப்புக்குச் சென்று பாலபிரஜாபதி அடிகளாரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கோரினார். இதையடுத்து அதிமுகவுக்கு தனது சமுதாயம் ஆதரவு தரும் என அவர் அறிவித்தது நினைவிருக்கலாம்.
இதேபோல நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேவியர் என்பவர் கூறுகையில், டெல்லியில் நடந்த பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் அது திருப்தி அளிப்பதாக கூறிய போராட்டக் குழுவினர் சென்னை வந்த பின்னர் திருப்தி இல்லை என்றனர். மேலும் 9ம் தேதி இடிந்தகரையில் விளக்கக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்து விட்டு அங்கு திடீரென உண்ணாவிரதம் நடப்பதாக கூறினர். இப்போது மத்திய அ ரசுக்குக் கெடுவும் விதித்துள்ளனர்.
மத்திய அரசுஇரட்டை வேடம் போடுவதாக இவர்கள் கூறினர். ஆனால் இவர்கள் பல வேடங்களைப் போட்டு வருகின்றனர். அப்பாவிகளான, பாமர மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி இவர்கள் அதில் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக தெரிகிறது என்றார்.












Click it and Unblock the Notifications