பெங்களூர் வரும் ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பு- 17ம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவு
சென்னை: பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அக்டோபர் 17ம் தேதிக்குள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக காவல்துறைக்கு தனி கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட் உத்தரவுகளையடுத்து வரும் 20ம் தேதி நேரில் ஆஜராவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டிருந்தார்.
அப்போது பெங்களூர் காவல்துறையின் இணை ஆணையர் ஜி.ரமேஷ் ஆஜரானார். பெங்களூர் வரும் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை அவர் தாக்கல் செய்யவில்லை.
அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில்,பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கர்நாடக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை இடம் தேர்வு செய்ய முடியவில்லை. அது தொடர்பான அறிக்கையை வரும் 17ம் தேதி தாக்கல் செய்கிறோம். அதுவரை கால அவகாசம் வேண்டும் என்றார்.
அதைக் கேட்ட நீதிபதி, ஜெயலலிதா ஆஜராகவுள்ள 20ம் தேதிக்கும் 17ம் தேதிக்கும் இருக்கும் நேரம் மிகவும் குறுகிய காலமாக இருக்கிறது. அதற்குள் இடம் தேர்வு செய்து முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அறிக்கை கொடுங்கள் என்றார்.
அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ஆச்சார்யா, முழு பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம். அதுபற்றி முடிவு எடுக்கத்தான் 17ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.
இதையடுத்து கண்டிப்பாக அக்டோபர் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய என்று உத்தரவிட்டார். விசாரணையை அன்றைய தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications