வீட்டு வாசலில் மது பாட்டில்- வாக்காளர்களைக் கவர கர்நாடக 'சரக்கு' தரும் வேட்பாளர்கள்!
திருவள்ளூர்: ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பகுதி வாக்காளர்களைக் கவருவதற்காக கர்நாடகத்திலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து வீடு வீடாக வாசலில் டோர் டெலிவரி செய்து வருகிறார்களாம். இதனால் ஊரே மது மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் தான் இந்தக் கூத்து.
புதுகும்மிடிப் பூண்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள், வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், 'ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்படும், அதிக மதிப்பெண் பெறும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பேரூராட்சி ஆக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப் படும்' என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
இது போதாதென்று கர்நாடகத்திலிருந்து மது பாட்டில்களை கடத்தி வருகிறார்களாம். லாரி,வேன்கள் மூலம் இந்த மதுவை கொண்டு வந்து வீடு வீடாக சப்ளை செய்கிறார்கள். வீட்டு வாசலில் இரவில் வைத்து விட்டுப் போய் விடுகிறார்களாம்.
கர்நாடக சரக்கு போதாதென்று லோக்கலிலும், டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு சரக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு கேட்பவர்களுக்கு விநியோகித்து வருகின்றனராம்.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மது அருந்த டாஸ்மாக் கடைகளுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். வீடு தேடி வரும் மது வகைகளை ரசித்து, ருசித்து அருந்தி வேட்பாளர்களை வாழ்த்தி வருகிறார்களாம்.
இதுவரை ஜனநாயகத்தை கொலைதான் செய்து வந்தார்கள். இப்போது சித்திரவதை செய்து படுகொலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications