திருச்சி இடைத் தேர்தலில் காங். ஓட்டு யாருக்கு என்பது தொண்டர்களுக்குத் தெரியும்-தங்கபாலு
மதுரை: திருச்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்தே அந்த நடவடிக்கையை எடுத்தோம். எனவே அங்கு யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது தொண்டர்களுக்குத் தெரியும் என்று புரிந்தும் புரியாததுமாக பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
மதுரை வந்த தங்கபாலு அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கூட்டணி தர்மத்திற்காகவே நாங்கள் திருச்சியில் போட்டியிடவில்லை. அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதுவும் கூட கட்சியை வலுப்படுத்தவே உதவும் என்பதால் தனித்துப் போட்டியிடுகிறோம்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்க்கு மட்டும்தான் காங்கிரசுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்து வருகிறோம். திருச்சி இடைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரியும்.
இனி மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் அமையும். இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். அதற்கு முன்னோட்டம்தான் இந்தத் தேர்தல்.
காங்கிரஸின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கொள்கையுடையவர்களை காங்கிரசில் இணைய வரவேற்போம். காங்கிரஸ் தலைமையில் இனி தேர்தலைகளை எதிர்கொள்வோம் என்றார் அவர்.
கூட்டணி தர்மம் என்று பேசிய தங்கபாலு, யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும் என்று கூறி விட்டு, இனிமேல் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி என்று கூறியிருப்பது பெரும் குழப்பமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications