பென்னலூர்ப்பேட்டை ஜமீன் நிலத்தைப் பறித்து அண்ணா அறிவாலயம் கட்டியுள்ளனர்- ஜெ. புகார்

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஈடுபட்டார். வேனில் அமர்ந்தபடியே அவர் பல இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது திமுகவினரின் நில அபகரிப்புகள், கே.என்.நேருவின் நில அபகரிப்பு மற்றும் மோசடிகள் ஆகியவற்றையே பிரதானமாக பேசினார். மேலும் அவரது பேச்சின் முக்கிய அம்சமாக, சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் குறித்த குற்றச்சாட்டு அமைந்திருந்தது.
ஜெயலலிதாவின் பேச்சு:
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடுகிறார். அவரது பெயர்தான் நேரு; ஆனால், அந்தப் பெயருக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர்; நேர்மாறான வழியில் செயல்படக் கூடியவர்.
முந்தைய திமுக ஆட்சியில் நேரு அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக, மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்தவர்தான் இந்த நேரு.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், பொதுமக்கள் மட்டுமல்லாமல் திமுக அனுதாபிகளே அவர் மீது நில அபகரிப்பு புகார்களை அளித்துள்ளனர்.
இந்தத் தருணத்தில் சென்னையில் திமுக தலைமையகம் அமைந்துள்ள இடத்தை கருணாநிதி எப்படி அபகரித்தார் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
திமுக தலைமையகம் சென்னை அண்ணா சாலையில் சுமார் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த இடம் பென்னலூர்பேட்டை ஜமீனுக்குச் சொந்தமான இடம். இந்த இடத்துக்கு 1972 ஆம் ஆண்டு சொத்து வரி கட்ட வேண்டும் என்றும், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, ஜமீன்தாரின் இளைய மகன் பி. சுப்புரத்தினம் நாயுடு சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இந்த இடத்தை திமுகவுக்குக் கொடுத்துவிடும்படியும், இல்லாவிடில், எந்தவித இழப்பீடும் இன்றி நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் இந்த இடம் கையகப்படுத்தப்படும் எனவும் மிரட்டப்பட்டார். இதனால், வேறு வழியின்றி அந்த இடம் திமுக அறக்கட்டளையின் பெயரில் 1972 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் இந்த இடத்துக்கு விதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்தப் பத்திரத்தில் ஜமீன்தாரின் குடும்பத்தினர் பலர் கையெழுத்து இடவில்லை. ஜமீன் குடும்பத்தில் உள்ள 10 பேருக்குப் பதிலாக சுப்புரத்தினம் நாயுடு மட்டும் கையொப்பமிட்டுள்ளார்.
ஆனால், அந்த இடத்துக்கான பத்திரத்தில் சுப்புரத்தினம் நாயுடு பெயர் இல்லை. எனவே, இதை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, அந்தக் காலத்திலேயே நில அபகரிப்பில் கை தேர்ந்தவர் கருணாநிதி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேபோல, திருச்சியில் உள்ள திமுக அலுவலகமும் வக்ஃப் வாரிய நிலத்தை அபகரித்துக் கட்டப்பட்டதுதான்.
ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்துகள் மீட்டுத் தரப்படும் என சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி அளித்தேன். அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. அந்த வழக்குகளைக் கையாள 25 சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நில அபகரிப்பு தடுப்பு சிறப்புக் காவல் பிரிவில் நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை 17,431 புகார்கள் வரப்பெற்றன. இவற்றில் 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 28 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 755 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் ரூ. 624.66 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications