தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இப்ராகிம் மிர்ச்சி லண்டனில் கைது

61 வயதான மிர்ச்சியிடம் லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இன்டர்போல் மற்றும் தூதரகம் மூலமாக லண்டன் போலீசாரிடம் கேட்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
இவர் போதை மருந்து கடத்தல் மற்றும் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளுக்காக மும்பை போலீசால் தேடப்படுபவர் ஆவார்.
அவருக்கு எதிராக இன்டர்போல் பிறப்பித்த நோட்டீஸ், 1994-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், லண்டனில் அரிசி இறக்குமதி செய்து வந்த அவரை இங்கிலாந்து போலீசார் இத்தனை காலமாக கைது செய்யாமல் விட்டு வைத்திருந்தனர்.
இந் நிலையில் இப்போது அவரை திடீரென கைது செய்துள்ளனர்.
சோமாலியா நாட்டு பாஸ்போர்ட்டுடன் பல நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்த இவரை 1998ம் ஆண்டு இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்தியாவிடம் ஒப்படைக்காமல் அவரை உடனே விடுவித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரதராஜ முதலியார் மற்றும் கரீம் லாலா ஆகியோருடனும் சேர்ந்து மும்பை துறைமுகத்தில் சிறிய அளவிலான கடத்தல்களில் ஈடுபட்டு வந்த மிர்ச்சி பின்னர் தாவூத் இப்ராகிமின் கும்பலில் சேர்ந்தார்.
ஐ.நா. அறிக்கையின்படி உலகின் டாப் 50 சர்வதேச போதை மருந்து கடத்தல் பேர்வழிகளில் மிர்ச்சியும் ஒருவர் ஆவார்,
கடந்த இருபது ஆண்டுகளாக லண்டனின் எஸ்ஸெக்ஸ் டவுனில் உள்ள ஹார்ன்சர்ச் பகுதியில் மாபெரும் பிளாட்டில் தனது மனைவியான முன்னாள் நடிகை ஹென்னா கவுசருடன் இவர் வசித்து வருகிறார்.
இவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளில் சிபிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications