ஜெயலலிதா ஆட்சியில் மின்வெட்டு 5 மணி நேரமாகி விட்டது: ஸ்டாலின்
திருச்சி: 50 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை கருணாநிதி வெறும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றினார் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மேற்கு தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இறுதி நாளான நேற்று மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளரான கே.என். நேருவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
50 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை கருணாநிதி வெறும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றினார். தனது வயது, உடல் நலத்தை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அயராது மக்கள் பணியாற்றிய அவருக்கு கொஞச்ம் ஓய்வு தேவை என்று நினைத்து தான் நீங்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்து ஜெயலலிதாவை முதல்வராக்கினீர்கள்.
தேர்தல் நேரத்தில் கூறியவற்றை எல்லாம் அவர் நிறைவேற்றினாரா? ஆட்சிக்கு வந்த கடந்த 5 மாதங்களில் அவர் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
முதல்வராகப் பொறுப்பேற்ற சில நிமிடங்களில் தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறையை போக்குவேன் என்றாரே போக்கினாரா? மின்வெட்டு 1 மணி நேரத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 5 மணி நேரமாகியுள்ளது. சரி விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன் என்றாரே. அது தான் நடந்ததா. இல்லையே, மாறாக விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.
மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளார். திமுகவினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டு தேர்தல் பணியாற்றும் செயல்வீரர்களை சிறையில் தள்ளுவது தான் அவர் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை.
அதே போன்று கே.என். நேரு மீதும் பொய் வழக்குகள் போட்டார். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்கும் சமயத்தில் இன்னொரு வழக்கில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார். நீதிமன்றமே நேருவை கைது செய்தது தவறு என்று கூறி அவரை விடுதலை செய்துள்ளது.
நேரு எம்.எல்.ஏவாக தேர்வாகி பின்னர் அமைச்சராகி திருச்சிக்காக பல்வேறு திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். கருணாநிதி தமிழகத்தில் 10 மாநகராட்சிகளை உருவாக்கினார். அந்த 10ல் திருச்சி மாநகராட்சிக்கு அதிக நிதியை பெற்றுத் தந்தவர் நேரு என்றார்.