உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: அன்னாவுக்கு திக்விஜய் கடிதம்
டெல்லி: உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் ஊழல்வாதிகள். உங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளார் திக்விஜய் சிங் அன்னா ஹஸாரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹிரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் நாளை இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவின் குழுவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அன்னாவுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். நாடாளுமன்றம் மீது நம்பிக்கை வையுங்கள். ஊழல்வாதிகளுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடினால் ஊழலை எப்படி ஒழிக்க முடியும். உங்களைப் போன்ற தூய்மையானவர்கள் அரசியலுக்கு வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.
நீங்கள் எடுக்கும் முடிவுகளால் யார் பயனடைகிறார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் காங்கிரஸை எதிர்த்தால் பிறகு யாரோடு இருக்கிறீர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளவர்கள் உங்களை குழப்புகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் உங்களுக்கு ஆதரவளித்துள்ளார். அதனால் உங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், உங்கள் அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று நான் எப்பொழுது கூறினாலும் என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர பாஜக எதுவும் செய்ததில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திக்விஜய் சிங் மேலும் கூறுகையில்,
அன்னாவுக்கு எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இல்லை என்றால் அவர் ஏன் பாஜகவைப் பற்றி வாய் திறக்கவில்லை. லோக்பால் மசோதா குறித்து அவர் போட்ட 3 நிபந்தனைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொணட பிறகும் அவர் ஏன் எங்கள் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார் என்று புரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications