அத்வானி பயணித்த 'ரதம்' சேதம்-சிறிது நேரம் தடைபட்ட அத்வானியின் யாத்திரை
பாட்னா: ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான பா.ஜ.க. தலைவர் அத்வானி நடத்திய ரத யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட ரதம் (பஸ்) சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் யாத்திரை சிறிது நேரம் தடைபட்டது.
நாட்டின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி, பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ரத யாத்திரைக்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய பஸ் ரதமாக பயன்படுத்தப்படுகிறது.
முதலில் பாலத்தில் மோதியது
இந்த பஸ் பாட்னாவில் இருந்து ஆரா நகரை நோக்கி சென்ற போது, இடையே குறுக்கிட்ட கோவில்வார் பாலத்தைக் கடந்தது. அப்போது பாலத்தின் கம்பி இடித்ததில் பஸ்சின் மேற்கூரை சேதமடைந்தது.
ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த பாலத்தில் பஸ் சிக்கியதால், 30 நிமிடங்கள் அங்கேயே நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் பாலத்தில் சிக்கிய பஸ்சை மீட்க உதவினர்.
அடுத்து மரத்தில் மோதியது
பின்னர் அதை சீரமைத்து, ஆரா பகுதியில் நடந்த பொது கூட்டத்திற்கு செல்லும் வழியில் இருந்த மரம் ஒன்றிலும் மோதியது. ஆனால் அதிகளவில் பஸ் சேதமடையவில்லை. இதனால் அத்வானி ரத யாத்திரையை தொடர்ந்தார்.
ஏசி பெட்டியில் கோளாறு
முன்னதாக பஸ்சில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அதிலிருந்து கார்பன் மேனாக்சைடு வாயு வெளியேறியது. இதனால் இந்த பஸ்சில் பயணித்த பா.ஜ.க. தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு, ரத யாத்திரையை தொடர்ந்தார் அத்வானி.
இந்த தகவலை பா.ஜ.க. எம்.பி.யும், ரத யாத்திரையின் ஒருங்கிணைப்பாளருமான அனந்த குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications