கூடங்குளம் போராட்ட பின்னணியில் சந்தேகம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டத்தின் பிண்ணனியில் தனக்கு சந்தேகம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் காங்கிரசுக்கு எப்போதுமே செல்வாக்கு உண்டு. 1967ல் காமராஜரை வெற்றி பெற வைத்து காங்கிரஸ் கோட்டை என்பதை இந்த மாவட்டம் நிரூபித்தது. கடந்த தேர்தலில் சேராதவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போதும் இந்த மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.
தயாநிதி, கலாநிதி மாறன் வீடுகளில் சிபிஐ நடத்திய ரெய்டு வழக்கமானது. சட்டத்திற்கு உட்பட்டு சோதனை நடந்துள்ளது. இதில் கருத்து கூற எதுவும் இல்லை. தமிழகத்தில் நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர்களும், திமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். ஏழைகளின் நிலத்தை அபகரித்தால் தண்டனை அனுபவித்து தான் தீர வேண்டும்.
அதிமுக அரசு ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வியில் ஏற்பட்ட குழப்பம், பல மணி நேரம் மின்தடை போன்றவைகளால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு இப்போது உற்பத்தி ஆரம்பிக்கும் நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களின் அச்சத்தைப் போக்கு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை அரசு அளிக்க வேண்டும்.
மத்திய அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். மேலும் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 900 மெகா வாட் மின்சாரம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திட்டங்கள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஏற்படாத பிரச்சனை இப்போது ஏற்பட்டது ஏன், இந்த போராட்டத்தின் பிண்ணனியில் எனக்கு சந்தேகம் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு அணுமின் நிலையம் குறித்த அச்சத்தை போக்குவதில் மாநில அரசுக்கு பங்கு இல்லை என்பது போல் பேசக் கூடாது. மத்திய அரசுக்கு இருக்கும் பங்கை போல மாநில அரசுக்கும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கடமை இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications