அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வந்த சரத்தை நிறுத்திய சமகவினர்
தூத்துக்குடி: அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை, அவரது கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னத்துரை மற்றும் யூனியன் வேட்பாளர்களை ஆதரித்து புதியம்புத்தூரில் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காரில் சென்றார்.
அப்போது, ஓட்டப்பிடாரம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து சரத்குமார் காரை மறித்து, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் காரில் இருந்து இறங்கி வந்து விசாரித்தார். அப்போது ச.ம.க.வினர், ஓட்டப்பிடாரம் யூனியன் 11வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ச.ம.க. சார்பில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நீங்கள் அ.தி.மு.க.வினரை மட்டும் ஆதரித்து பிரசாரம் செய்யக்கூடாது என்று ஆவேசத்துடன் கூறினர். இதற்கு பதிலளித்த சரத்குமார், 11வது வார்டில் நமது கட்சியினரும் போட்டியிடுவது குறித்து யாரும் எனக்கு தெரிவிக்கவில்லை. இதனால் 11வது வார்டில் மட்டும் யாரையும் ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டேன் என்று சரத்குமார் உறுதியளித்ததால் கட்சியினர் சமாதானம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications