திருச்சி மேற்குத் தொகுதியில் ஓட்டுப் போட்ட பின் கோர்ட்டுக்குப் போய் கையெழுத்திட்ட நேரு
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போட்ட முன்னாள் அமைச்சரும், திமுகவேட்பாளருமான கே.என்.நேரு அதன் பின்னர் கோர்ட்டுக்குப் போய் கையெழுத்துப் போட்டார்.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கே.என்.நேரு மக்கள் மன்றம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவரைப் பார்த்த பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், பழைய சிரிப்பைக் காண முடியவில்லையே, சிரித்தபடி போஸ் கொடுங்கள் என்றுகேட்டனர். அதற்கு நேரு, இன்னும் 40 நாள் இருந்தால்தான் சிரிப்பதா, இல்லையா என்பது தெரியும் என்றார்.
கடந்த தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரியம் பிச்சை 77,492 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேரு 70,313 வாக்குகள் பெற்றார். 7179 வாக்குகள் வித்தியாசத்தில் நேரு தோற்றுப் போனார்.
எனவே இந்த முறை எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர். அதேசமயம், நேருவின் நில அபகரிப்புகளை அதிமுக அரசு அம்பலப்படுத்தியிருப்பதாலும், திருச்சியில் நேருவுக்கு எதிரான அலை வீசுவதாலும், அதிமுகவே வெற்றி பெறும் என்று வேட்பாளர் பரஞ்சோதி தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக, திமுக பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள் - 2,05,622
பதிவான வாக்குகள் - 1,54,322
மரியம்பிச்சை (அ.தி.மு.க) - 77,492
கே.என்.நேரு (தி.மு.க) - 70,313
அரசின் மீதான தீர்ப்பாக பார்க்கப்படும் என்பதால், தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் அதிமுகவினர் மிகத் தீவிரமாக களப் பணியாற்றியுள்ளனர். இதனால் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட்டுக்குப் போய் கையெழுத்து
தேர்தலில் வாக்களித்த பின்னர் கே.என்.நேரு அங்கிருந்து திருச்சி கோர்ட்டுக்குச் சென்றார். அங்கு கோர்ட் உத்தரவுப்படி அவர் கையெழுத்திட்டார். அதேபோல அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.












Click it and Unblock the Notifications