பாக்தாத் நகரில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி
பாக்தாத்: பாக்தாத் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடிக்கும் வகையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 2 தற்கொலை படை தாக்குதல்களில் 23 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் ஆல்வியா இடத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை 8 மணியளவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருநபர் வெடிப் பொருட்களை நிரப்பிய கார் ஒன்றை ஓட்டி வந்தார். வேகமாக ஓட்டி வந்து போலீஸ் நிலைய சுவர் மீது மோத செய்தார். இதில் காவலர்கள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் ஹூரியா என்ற இடத்தில் அதேபோன்ற வெடிப் பொருட்களை ஏற்றிவந்த மற்றொரு காரை, தற்கொலை படையை சேர்ந்த நபர் அங்குள்ள போலீஸ் நிலையம் மீது மோத செய்தார். அதில் 5 பேர் பலியாகினர். 2 சம்பவங்களிலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, அந்நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஒசாமா அல்-நூஜைப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ஆல்வியாவில் தாக்குதல் நடத்திய நபர் காருடன் போலீஸ் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால் பாதுகாப்பு வீரர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால் வெளியே இருந்த சுவர் மீது காரை மஅங்கேயே வெடிப்பொருட்களை வெடிக்க செய்தான். போலீஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி கொடுத்திருந்தால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் 4 மீட்டர் அகலம், 2 ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் நிலையத்திற்கு அருகே இருந்த பள்ளி கட்டிடமும் கடும் சேதம் அடைந்துள்ளது. பாக்தாத் நகரில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தகர்க்கும் எண்ணத்தில், தற்கொலைப் படையினர் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, என்றனர்.