உள்ளாட்சித் தேர்தல்: மதுரை அருகே 34 அண்டாக்கள், 78 மது பாட்டில்கள் பறிமுதல்
மதுரை: மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் அருகே இருக்கும் அழகு நாச்சியார்புரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா, குண்டாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வரும் 17, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் வாக்காளர்களை கவர அதிக அளவில் பணம், பல்வேறு பரிசு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதை தடுக்க மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில் 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் அருகே அழகு நாச்சியார்புரத்தில் வாக்காளர்களுக்கு பித்தளை அண்டாக்கள் மற்றும் குண்டாக்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து வடக்கு தாலுகா தாசில்தார் அலெக்சாண்டர் ராய் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை செய்த போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 அண்டாக்கள் மற்றும் 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications