நாடு முழுவதும் நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு: மின்சார உற்பத்தி கடுமையாக பாதிப்பு
டெல்லி: நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ததாலும், தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது பாதிக்கப்பட்டதாலும், கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாலும் நாடு முழுவதும் நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 மின் உற்பத்தி நிலையங்களை நடத்தி வரும் மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்பரேசன் நிறுவனத்திடம் இன்னும் 1 நாளுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. 13 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை இந்த நிறுவனம் வழக்கமாக கையிருப்பில் வைத்திருப்பது வழக்கம். ஆனால், இந்த நிறுவனத்துக்கு வேலை நிறுத்தம் காரணமாக, கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய நிலக்கரி வந்து சேராததால் கிட்டங்கிகள் காலியாகிவிட்டன.
இதனால் இந்த 5 மின் உற்பத்தி நிறுவனங்களிலும் மின் உற்பத்தி பெருமளவு சரிந்துவிட்டது. இதனால் டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மின்சார சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகமே கர்நாடகத்தில் பெரும் மின்சாரப் பற்றாக்குறை உண்டு. இப்போது இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. பெங்களூரில் நகரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை மின்சாரம் தடைபடுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்கள் இல்லாமலேயே, கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications