தனி தெலுங்கானா மாநிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: விஜயசாந்தி
ஹைராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அதற்கு என்ன தடை வந்தாலும் அஞ்சமாட்டோம் என நடிகையும், டி.ஆர்.எஸ். எம்.பி.யுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க கோரி, கடும் போராட்டம் நடந்து வருகிறது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஹைராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் எம்.பி.யும், நடிகையுமான விஜயசாந்தி கூறியதாவது, தனி மாநிலம் அளிக்க கோரி, தெலுங்கானா மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக உண்ணாவரம், போராட்டம் என தீவரமடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தனி தெலுங்கானா மாநிலத்தை பிரித்து கொடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தனி மாநிலத்திற்கான தீவிரத்தை அடக்க பார்க்கின்றனர்.
தெலுங்கானா போராட்டத்தை அடக்க, போலீஸ் அடக்குமுறையை ஏவி முயற்சிகள் நடக்கின்றனர். தனி தெலுங்கானா அமைப்பதற்கு பா.ஜ.க.வின் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போலீஸ் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், தனி மாநிலம் கிடைக்கும் வரை டி.ஆர்.எஸ்.கட்சியின் போராட்டம் தொடரும். டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ்வை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என காங்கிரஸ் கட்சியினர் முயன்று வருகின்றனர்.
தனி தெலுங்கானா கிடைக்கும் வரை டி.ஆர்.எஸ். கட்சியினரும், தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்களும் சோர்ந்து போக கூடாது. இதுகுறித்து அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தெலுங்கானா குழுவினர் நடத்தப்படும் ரயில் மறியல் போராட்டத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன், என்றார்.