கூடங்குளம் அணு மின் நிலைய முற்றுகை-கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூ்டக் கோரி இடிந்தகரையில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கூடங்குளத்தைச் சுற்றிலும் மக்கள் முற்றுகைப் போராட்டங்களில் குதித்துள்ளதால் அணு மின் நிலையத்திற்கு யாரும் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில, மாவட்ங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கூடங்குளத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
12 தேதி காலையில் கூடன்குளம் மற்றும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்கள் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு சென்றனர். அப்போது போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் தினக்கூலி ஊழியர்களை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வழிமறித்து வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போராட்டக் குழுவினர் தினக்கூலி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி சர்வமத பிரார்த்தனை நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்து விஜயாபதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தினர். விஜயாபதியில் உள்ள முஸ்லிம் மசூதியில் இமாம் சாகுல்ஹமீது தலைமையில் போராட்டக் குழுவினருடன் முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர். அதேபோல இடிந்தகரையில்உள்ள லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு பிராத்தனையும் நடத்தினர்.
.கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்களை அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கிராமம் கிராமமாக சென்று போராட்டக் குழுவினர் ஆதரவு கேட்டு வருகின்றனர். மேலும் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கூடன்குளம் பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மேலும் அணுநிலையத்திற்குள் பணியாளர்களை நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து கற்களை போட்டு மறியலில் ஈடுபடுவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. பொதுமக்களின் இந்த வேகமான போராட்டத்தினால் அணுமின் நிலையத்திற்கு செல்லும் தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வந்ததில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வேலைக்கு செல்வதால் அணுமின்நிலைய கட்டுபான பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இதனால் அங்கு தங்கியிருந்த வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர்களும் பெட்டி படுக்கைகளுடன் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.
குடிநீர் குழாய்கள் துண்டிப்பு
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குச் செல்லும் குடிநீர் இணைப்புகளையும் போராட்டக் குழுவினர் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு யாரும் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல அணு மின் நிலையத்திற்குள் இருக்கும் பலரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பெரும் பாதிப்பும், பணிகள் ஸ்தம்பிப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications