கள்ள ஓட்டு போட்டால் 2 ஆண்டு சிறை: கோவை கலெக்டர் கருணாகரன் எச்சரிக்கை
கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஊரக, நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்து, கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்யும் நபர்கள் மீது ஊராட்சிகள் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ள ஓட்டு போடுபவருக்கு குறைந்தபட்சம் 5 மாதங்கள், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.
வாக்குப்பதிவு செய்வது, எண்ணுவது போன்ற கடமையை செய்யும் அலுவலர், எழுத்தர், முகவர் அல்லது பிற நபர்கள் யாரும், வாக்காளர் வாக்குப்பதிவு செய்த விவரத்தை அறிய முயற்சி செய்யக் கூடாது.
மாறாக வாக்களித்த விவரத்தை முயன்று பெறும் நபர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications