லட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 8 குமரி மீனவர்கள் விடுவிப்பு
கருங்கல்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக லட்சத்தீவு அருகே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் 8 பேரும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய பிறகு படகுடன் விடுவி்க்கப்பட்டனர்.
கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த ஜான்சன் ஆகிய 8 பேரும் ஆழ்கடலில் மீன்படிக்க சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி தொழிலுக்கு சென்ற இவர்கள் ஆழ்கடலில் சில நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு 8ம் தேதி கரைக்கு திரும்பினர். இந்நிலையில் லட்சத்தீவு மரைன் போலீசார் இந்திய கடல் எல்லையை தாண்டியதாக இவர்களை பிடித்து போலீஸ் காவலில் வைத்து, படகையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஹெலன் டேவிட்சன் எம்.பி., மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் ஆகியோர் லட்சத்தீவு மீன்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் குமரி மாவட்டம் வரவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications