திமுகவினரால் தாக்கப்பட்டதால் அவமானம்- சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்தார்
வேலூர்: திமுகவினரால் தாக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் கங்கைநல்லூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பி்ல மகாலிங்கம் என்பவரும், சுயேச்சையாக விநாயகம் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களுக்கிடையே வேட்பு மனு தாக்கலிலிருந்தே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாலிங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை விநாயகம் ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் திரண்டு வந்து விநாயகத்தை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.
திமுகவினரால் தான் தாக்கப்பட்ட தகவல் ஊரெல்லாம் பரவியதால் அவமானமடைந்தார் விநாயகம். இதையடுத்து அவர் விஷம் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வயிறு வலிக்கவே பொறுக்கமுடியாமல் 108 ஆம்புலன்ஸுக்கு அவரே போன் செய்தார். அவர்கள் விரைந்து வந்து விநாயகத்தை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு விநாயகத்தின் ஆதரவாளர்கள் திரண்டு விட்டனர். பின்னர் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். விநாயகம் ஆதரவாளர்கள் கோபத்துடன் இருப்பதால், கங்கைநல்லூரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications