வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்-சோ. அய்யர்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்த அத்தனை வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையைச் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் நகர்ப்புறங்களில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 வாக்காளர்களும், ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 929 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். நகர்ப்புறங்களில் 17 ஆயிரத்து 690 வாக்குச்சாடிகளும், ஊரகப் பகுதிகளில் 30 ஆயிரத்து 681 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. வாக்குப்பதிவு சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் அடையாளச்சீட்டு பெற இயலாதவர்கள், வாக்குப்பதிவன்று வாக்குசாவடி அருகில் தேர்தல் பணியாளர்களால் வழங்கப்படும் அடையாளச்சீட்டினை பெற்று வாக்களிக்கலாம். ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்தும் வாக்களிக்கலாம். தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் நியாயமாகவும், அச்சமின்றி, பணிபுரிந்திடுமாறும், ஏதேனும் இடைiறுகள் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்.
இந்த வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்திட அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தலை அமைதியாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications