வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 டவுன் பஞ்சாயத்துகள், 9 பஞ்சாயத்து யூனியன்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்கு பதிவிற்காக நெல்லை மாநகராட்சியில் 353 வாக்குச்சாவடிகள், நகராட்சிகளில் 85 வாக்குச்சாவடிகள், டவுன் பஞ்சாயத்துகளில் 312, கிராம பஞ்சாயத்துகளில் 31 என மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நெல்லை மாவட்டத்தில் 72 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. மாநகராட்சியில் 61.41 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
நெல்லை மாநகராட்சி வாக்குகள் பாளை பொறியியல் கல்லூரியிலும், பாளை யூனியன் வாக்குகள் நெல்லை சட்டக் கல்லூரியிலும், மானூர் யூனியன் வாக்குகள் நெல்லை ராணி அண்ணா கல்லூரியிலும் வைத்து எண்ணப்படுகிறது.
மாநகராட்சியில் உள்ள 353 வாக்குச்சாவடிகளிலும் 706 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை வார்டு வாரியாக பிரித்து சீல் வைத்தனர். பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வெப் கேமரா மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications