முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு

நேற்று பெரும் பதட்டத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மிகப் பெரிய அளவில் வன்முற இல்லை என்ற போதிலும், சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட பெரும் குழப்பம், பெருமளவிலான வாக்காளர்கள் ஓட்டுப் போட அனுமதி மறுக்கப்பட்டது, அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டுப் போட்டதாக எழுந்த புகார்கள் உள்ளிட்டவற்றால் பதைபதைப்பு நிலவியது.
இந்தக் குழப்பங்கள் காரணமாக நேற்று சென்னையில்மட்டும் வாக்குப் பதிவு மகா மந்தமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய வாக்குப் பதிவின்போது பதிவான மொத்த வாக்குகள் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மாநகராட்சிகளில் வாக்கு சதவீதம்
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவில் சராசரியாக 77.02 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னையில் 48, மதுரையில் 63, கோவையில் 59, திருச்சியில் 64, சேலத்தில் 69, ஈரோட்டில் 71, வேலூரில் 72, திருப்பூரில் 67, தூத்துக்குடியில் 69, நெல்லையில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் கடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலின்போது 55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் தற்போது மகா மோசமான வாக்குப் பதிவு நடந்திருப்பது அனைவரிடத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
கிராமங்களில்தான் வாக்குப் பதிவு அதிகம்
நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். கிராமப்புறங்களில் 82 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்துள்ளது. மாநகரப் பகுதிகளில் 64 சதவீத அளவிலு்ம், நகராட்சிகளில் 74 சதவீத அளவிலும், பேரூராட்சிகளில் 79 சதவீத அளவிலும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications