சமூக விரோதிகளின் துணையோடு தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்: விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட அராஜகத்தையே மீண்டும் அ.தி.மு.க. அரசு கடைபிடிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் பெரம்பூர் பகுதியில் உள்ள 35வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளராக எம்.வேல்முருகன் போட்டியிடுகிறார். அப்பகுதி வாக்காளர்கள் வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள பூத்களில் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டு பொறுத்து கொள்ள முடியாத ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், வேட்பாளர் வேல்முருகனையும், அவரது தம்பிகள் பிரபு, சரவணன் ஆகியோர்களையும் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.
இதே போன்று சென்னை எழும்பூர் பகுதியில் 107வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் சரஸ்வதி எத்திராஜ் போட்டியிடுகிறார். அவருக்காக பூத்தில் பணியாற்றிய ராஜ்குமார் என்ற தே.மு.தி.க. தொண்டர் ஆளும் கட்சியின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
காவல் துறையினர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தேமுதிகவினர் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
காவல் துறையினர் கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காமல், ஆளும் கட்சி என்று ஆதரவு அளிக்காமல், நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
காவல் துறையினர் நடுநிலையோடு, சட்டப்படி வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டும். தேர்தலில் பாதுகாப்பு எற்பாடுகள் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கைவிட்டதே தவிர உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதை இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தேர்தல் ஆணையம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது.
உயர்நீதிமன்ற ஆணைப்படி வெப் கேமரா பல இடங்களில் வைக்கப்படவில்லை. வைத்த இடங்களிலும் சரியாக வேலை செய்யவில்லை.
தேர்தல் கமிஷன் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் தருவதாக விளம்பரப்படுத்தியது. முறையாக அதுவும் கொடுக்கப்படவில்லை. போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களும் ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர் என்ற புகார் வந்த வண்ணம் உள்ளன.
மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல்கள் என்று நடத்துவதை விட, உள்ளாட்சி மன்ற அனைத்து பதவிகளுக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களையே நியமனம் செய்துவிட்டால் தேர்தல் செலவும் மிச்சப்படும். இதர அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும் அல்லவா?
கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் நடத்தப்பட்ட அராஜகத்தையே மீண்டும் அ.தி.மு.க. அரசு கடைப்பிடிப்பது ஜனநாயக விரோத செயலாகும்.
எங்கெல்லாம் இத்தகைய தகராறுகள் வாக்கு சாவடிகளில் நடைபெற்றனவோ, தேர்தல் கமிஷன் அவற்றை கண்டறிந்து மறுதேர்தல் நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 19ம் தேதி அன்று அடுத்த கட்ட தேர்தல் நடக்கவுள்ளதால் தேர்தல் கமிஷனும், காவல் துறையும் இம்முறையாவது தேர்தல் சுமூகமாக நடைபெற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக நிருபர்களிடம் அவர் பேசுகையில், பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளதாக தகவல் வந்துள்ளன. தேர்தல் கமிஷன் சரியாக செயல்பட்டு இருக்க வேண்டும். பூத் சிலிப் பல இடங்களில் வழங்கவில்லை. எனக்கு கூட தேர்தல் கமிஷனின் பூத் சிலிப் வரவில்லை. அதிமுக சின்னம் பொறித்த பூத் சிலிப் வந்தது. அதிலும் வாக்குச் சாவடியை கிளாரன்ஸ் உயர்நிலை பள்ளி என்று தவறாக குறிப்பிட்டிருந்தனர்.
வாக்குச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பழுதடைவது பெரிய விஷயம் இல்லை. கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது, தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் என்ன குறைகளை கூறினார்களோ அந்த குறைகள் இப்போதும் இருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications