நாளை மறுதினம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெ ஆஜர்-அவருக்காக நீதிமன்றமே பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றம

தனி ஒருவருக்காக நீதிமன்றமே இடம் மாற்றப்படுவது சமீபகாலத்தில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் போலி முத்திரைத்தாள் மோசடிப் புள்ளியான தெல்கியிடம் விசாரணை நடத்த தாற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது ரூ.66 கோடி அளவுக்கு வருமானத்தைவிட அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 2003ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில் ஏகப்பட்ட வாய்தாக்கள் வாங்கினார் ஜெயலலிதா.
ஒரு வழியாக இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டன. இதையடுத்து, வரும் 20ம் தேதி தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவார் என அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தனி நீதிமன்ற நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்துக்கு பதிலாக வேறு இடத்தில் விசாரணையை நடத்துவது குறித்த பரிந்துரைகளை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி தனி நீதிமன்றத்தில் பெங்களுர் போலீஸ் துணை கமிஷனர் ரமேஷ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், பெங்களூரின் மைய பகுதியில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் தனி நீதிமன்றம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் ஜெயலலிதா வரும் போது அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படும். அதை தவிர்க்க தற்காலிக நீதிமன்றம் அமைக்கலாம்.
இதற்காக பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள நீதியியல் அகாடமி, பாலபுரி விருந்தினர் மாளிகை, ஜக்கூரில் பெல்லாரி சாலையில் உள்ள விமானப் பயிற்சிப்பள்ளி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் காந்தி பவனில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற வளாகம் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்துள்ளோம்.
இதையடுத்து இந்த 4 இடங்களில் எங்கு தற்காலிக நீதிமன்றத்தை மாற்றலாம் என்று இருதரப்பு வழக்கறிஞர்களிடமு நீதிபதி கேட்டார். நீதிமன்றம் எந்த இடத்தை குறிப்பிட்டாலும் அதை ஏற்றுக் கொள்வதாக அவர்கள் பதிலளித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, தற்போதுள்ள நீதிமன்றத்தில் என்னென்ன வசதிகள் உள்ளதோ, அவற்றை 2 நாளில் புதிய இடத்தில் செய்து தர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் நுழைவு வாயில் அருகிலேயே, போலி முத்திரைதாள் மோசடி வழக்கு குற்றவாளி தெல்கியிடம் விசாரணை நடத்த தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே அதையே பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா வெளியிட்ட உத்தரவில், ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்துக்கு தனி நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்படும். வரும் 20ம் தேதி காலை காலை 11 மணிக்கு அந்த சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் ஜெயலலிதாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications