ராமநாதபுரத்தில் காங்கிரஸ்- பாஜகவினர் கல்வீசி மோதல்: தடியடி நடத்திக் கலைத்த போலீஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காங்கிரஸ்-பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் கடைசி நேரத்தில் சிலர் கள்ள ஓட்டுப் போடுவதாக தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 25வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோபி அங்கு சென்று பார்வையிட்டார். அதே போல பாஜக வேட்பாளர் குமாரும் அங்கு சென்றார்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அங்கிருந்த போலீசார் அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர்.
ஆனால் வெளியே சென்ற இரு தரப்பும் அரசு மருத்துவமனை முன்பு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்தது. பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications